Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கர தீ விபத்து- 20 குடிசைகள் எரிந்து நாசம்

பிப்ரவரி 07, 2021 11:51

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியில் ஒக்ஹலா சஞ்சய் காலனியில் குடிசை பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். மேலும் அங்கு துணி குடோன்களும் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிசை பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென்று குடிசை வீடுகளுக்கு வேகமாக பரவியது.

இதனால் தூங்கிக்கொண்டு இருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி எழுந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 30 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுக்கொண்டு வந்தனர். தீயை கடும் போராட்டத்துக்கு பின்னர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. அனைத்து பொருட்களும் தீயில் கருகின.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘குப்பையில் வீசப்பட்ட வீணான துணியில் இருந்து தீ பரவியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட குடிசை எரிந்துவிட்டன. ஒரு லாரியும் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடித்தபோது குடிசைக்குள் சிக்கிய 40 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால் முதியவர் ஒருவர் மாயமாகி விட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்